செவ்வாய், 31 மார்ச், 2009

ஏப்ரல் 1 -முட்டாள்களான அறிவாளிகள் தினம்!

சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் 'தான் ஒரு முட்டாள்' என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு 'அறிஞனாக' வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது."The first of April is the day we remember what we are the other 364 days of the year " - Mark Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்."முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், " பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்துவைத்தார்.இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர். இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள். எவ்வாராயினும் பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். நெப்போலியன் 1 ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் 'பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.கிரகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஸ்காட்லாந்தில் April Fool's Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார்.ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்", இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர். பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர். 1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.. ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.(ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நம்மை நம் அரசியல்வாதிகள் முட்டாள்களாக்கி வருவதால் பேசாமல் தேர்தல் நாளையே ஏப்ரல்-1ம் தேதிக்கு மாற்றிவிட்டால் என்ன?!)

From (proff)
---------
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0331-history-of-april-fools-day.html

வெள்ளி, 27 மார்ச், 2009

திங்கள், 16 மார்ச், 2009

வெறும் 400 ரூபாயில் 'டயாலிசிஸ்'

மார்ச் 12,2009,00:00

50,00,00,000 பேர்கள்... உலக அளவில் சிறுநீரக குறைபாடு காரணமாக பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இது. ஹார்வர்டு பல்கலை நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, நம் நாட்டில் 100க்கு 13 பேர் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவது, நமக்கு விடப்பட்டுள்ள, "ரெட் அலர்ட்'.

உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் தான் சிறுநீரக பாதிப்பின் திறவுகோல் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுநீரகம் செயலிழந்த நிலையில் "டயாலிசிஸ்' எனும் ரத்த சுத்திகரிப்பு முறை மூலம் கோடிக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்நாளை நீட்டித்து கொண்டிருக்கின்றனர்.
சிறுநீரக பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமையன்று (இன்று) உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சிறுநீரக பாதிப்பை அறிவது, தவிர்ப்பது, சிகிச்சை முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

பணக்காரர்களின் நோய் என வர்ணிக்கப்படும் சிறுநீரக பாதிப்பு ஏழைகளையும், நடுத்தர மக்களையும் காப்பாற்ற, குறைந்த கட்டணத்தில் "டயாலிசிஸ்' செய்யும் அரிய சேவையை ஆற்றி வருகின்றனர் சென்னையை சேர்ந்த "டாங்கர் பவுண்டேசன்' (tamilnadu kidney research foundation) அமைப்பினர். ""கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் நான் மருத்துவராக பணியாற்றி வந்தேன். அந்த நாட்டில் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு "டயாலிசிஸ்' சிகிச்சையளிக்கும் பணியை அரசே செய்து வருகிறது.

""தமிழகம் வந்தபோது, சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் "டயாலிசிஸ்' செய்ய வசதியின்றி இறந்து வருவதை அறிந்து அதிர்ந்து போனேன். இவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன் விளைவே, இந்த அமைப்பு,'' என்று "டாங்கர் பவுண்டேசன்' துவங்க அடிப்படையாய் இருந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார் டாக்டர் ஜார்ஜ் ஆப்ரகாம்.
கடந்த 1993ம் ஆண்டு சென்னையில் துவங்கிய இந்த அமைப்பு தற்போது, சென்னை நுங்கம்பாக்கம், அம்பத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் விரிவடைந்துள்ளது. இந்த மூன்று மையங்களிலும் சேர்த்து மொத்தம் 125 நோயாளிகள் சலுகை கட்டணத்தில் "டயாலிசிஸ்' செய்து வருகின்றனர். இது தவிர, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் ஒரு இயந்திரத்தை நிறுவி அங்குள்ள நோயாளிகளுக்கு "டாயலிசிஸ்' செய்யப்பட்டு வருகிறது.
""சிறுநீரகங்கள் இயங்காமல் போனால்,ரத்தத்தில் கழிவுகள் அகற்றப்படாது. இந்த கழிவுகளை சுத்தம் செய்யா விட்டால் நாளைடைவில் நோயாளி இறந்து விடுவார். இதைத் தவிர்க்க ரத்தத்தில் உள்ள இந்த கழிவுகளை சுத்தப்படுத்தும் பணியைத்தான் "டயாலிசிஸ்' என்று அழைக்கிறோம். இந்த இயந்திரம் ஒரு மாற்று சிறுநீரகம் போலவே செயல்படுகிறது,'' என்று விளக்கினார் ஆப்ரகாம்.

மரணத்தை தள்ளிப் போடும் இந்த சுத்திகரிப்பு முறையை தனியார் மருத்துவமனைகளில் செய்தால், மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டி வரும். அன்றாட உணவுக்கே வழியின்றி இருக்கும் ஏழைகளுக்கு சிறுநீரக பாதிப்பு வருமானால் அவர்களுக்கு இறப்பை தவிர வேறு "சாய்ஸ்' இல்லை. இதை போக்க வருமானம் குறைந்த ஏழைகளுக்கு குறைந்தபட்சமாக 400 ரூபாய் செலவில் "டயாலிசிஸ்' செய்யும் புனித காரியத்தை செய்து வருகின்றனர் "டாங்கர்' அமைப்பினர்.

டாக்டர் ஜார்ஜ் ஆப்ரகாம், டாக்டர் சுரேஷ் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் "டாங்கர்' தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் பல்வேறு மருத்துவர்களும் இந்த மையத்தின் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவி செய்து வருகின்றனர்.

""ஆர்ய வைத்யசாலையின் உதவியோடு, கோவையில் அடுத்த 3 மாதத்தில் எங்கள் மையத்தின் கிளையை துவங்கவுள்ளோம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிறுநீரக பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். இவர்களை கவனிப்பதற்காக இவர்களுக்கு என்று சென்னையில் தனியாக ஒரு "டயாலிசிஸ்' மையத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம்'' என்று எதிர்கால திட்டங்களை தெரிவித்தார் ஜார்ஜ் ஆப்ரகாம்.

"டாங்கர்' அமைப்பின் செயலர் லதா குமாரசாமி கூறியதாவது: உலக அளவில் 30 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்களுக்கே பெரும்பாலும் சிறுநீரக பாதிப்பு கண்டறியப்படுகிறது. சிறுநீரக பாதிப்பு 90 சதவீதம் வரை ஏற்பட்ட பின்தான் பெரும்பாலும் பாதிப்பு வெளியே தெரிய வருகிறது. "டயாலிசிஸ்' செய்வதோடு, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உதவி, மருந்துகள் வாங்கி தருதல் என 48 லட்ச ரூபாய் செலவில் உதவிகளை வழங்கியுள்ளோம். இதோடு, ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஊசியும் போட்டு வருகிறோம்.

இத்தனை பணிகளையும் செய்ய காரணமாய் பல்வேறு துறைகளை சார்ந்த பல நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கின்றனர். "டயாலிசிஸ்' செய்வதற்கு ஆகும் செலவை பல்வேறு நன்கொடையாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். முகம் தெரியாதவர்கள் உயிர்வாழ உதவும் அந்த நன்கொடையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறுநீரகம் என்பது...
*நம் உடலின் பின்பகுதியில் உள்ளது.
*நம் உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன.
*10 செ.மீ., நீளமும், 5 செ.மீ.,அகலமும் கொண்டது.
*ஒவ்வொன்றும் 150 கிராம் எடை கொண்டது.
*நச்சுப் பொருள்களை பிரித்தல், ரத்தக் கொதிப்பை சீர் செய்தல், எலும்புகளை உறுதி செய்தல், உடலில் நீர் நிலை சமப்படுத்துதல் உள்ளிட்டவை சிறுநீரகத்தின் பணிகள்.

சிறுநீரக கோளாறின் அறிகுறியும், காரணங்களும் :
"ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உடல்பருமன், புகை பிடித்தல், மது அருந்துதல், அடிக்கடி சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுதல்' போன்றவை சிறுநீரகக் கோளாறின் காரணங்களாகும். முகவீக்கம், சிறுநீர் குறைதல், கால்களில் வீக்கம், சிறுநீரில் ரத்தம் போதல், ரத்த சோகை, பசியின்மை, வாந்தி, உடல் அழர்ச்சி, தூக்கம் இன்மை, அரிப்பு உள்ளிட்டவை சிறுநீரகக் கோளாறின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

creatinine எனும் ரத்தப் பரிசோதனை மூலமும், சிறுநீரக சோதனை மூலமும் இதை கண்டறியலாம். முழுமையாக பாதிப்படைந்து சிறுநீரகம் செயலிழக்கும் முன் கண்டறிந்தால் உரிய சிகிச்சை வழங்க முடியும். இந்த ஆண்டு உலக சிறுநீரக தினத்தின் கோஷம் "உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல்' என்பதாகும்.

-- தினமலர்