திங்கள், 16 மார்ச், 2009

வெறும் 400 ரூபாயில் 'டயாலிசிஸ்'

மார்ச் 12,2009,00:00

50,00,00,000 பேர்கள்... உலக அளவில் சிறுநீரக குறைபாடு காரணமாக பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இது. ஹார்வர்டு பல்கலை நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, நம் நாட்டில் 100க்கு 13 பேர் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவது, நமக்கு விடப்பட்டுள்ள, "ரெட் அலர்ட்'.

உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் தான் சிறுநீரக பாதிப்பின் திறவுகோல் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுநீரகம் செயலிழந்த நிலையில் "டயாலிசிஸ்' எனும் ரத்த சுத்திகரிப்பு முறை மூலம் கோடிக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்நாளை நீட்டித்து கொண்டிருக்கின்றனர்.
சிறுநீரக பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமையன்று (இன்று) உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சிறுநீரக பாதிப்பை அறிவது, தவிர்ப்பது, சிகிச்சை முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

பணக்காரர்களின் நோய் என வர்ணிக்கப்படும் சிறுநீரக பாதிப்பு ஏழைகளையும், நடுத்தர மக்களையும் காப்பாற்ற, குறைந்த கட்டணத்தில் "டயாலிசிஸ்' செய்யும் அரிய சேவையை ஆற்றி வருகின்றனர் சென்னையை சேர்ந்த "டாங்கர் பவுண்டேசன்' (tamilnadu kidney research foundation) அமைப்பினர். ""கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் நான் மருத்துவராக பணியாற்றி வந்தேன். அந்த நாட்டில் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு "டயாலிசிஸ்' சிகிச்சையளிக்கும் பணியை அரசே செய்து வருகிறது.

""தமிழகம் வந்தபோது, சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் "டயாலிசிஸ்' செய்ய வசதியின்றி இறந்து வருவதை அறிந்து அதிர்ந்து போனேன். இவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன் விளைவே, இந்த அமைப்பு,'' என்று "டாங்கர் பவுண்டேசன்' துவங்க அடிப்படையாய் இருந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார் டாக்டர் ஜார்ஜ் ஆப்ரகாம்.
கடந்த 1993ம் ஆண்டு சென்னையில் துவங்கிய இந்த அமைப்பு தற்போது, சென்னை நுங்கம்பாக்கம், அம்பத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் விரிவடைந்துள்ளது. இந்த மூன்று மையங்களிலும் சேர்த்து மொத்தம் 125 நோயாளிகள் சலுகை கட்டணத்தில் "டயாலிசிஸ்' செய்து வருகின்றனர். இது தவிர, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் ஒரு இயந்திரத்தை நிறுவி அங்குள்ள நோயாளிகளுக்கு "டாயலிசிஸ்' செய்யப்பட்டு வருகிறது.
""சிறுநீரகங்கள் இயங்காமல் போனால்,ரத்தத்தில் கழிவுகள் அகற்றப்படாது. இந்த கழிவுகளை சுத்தம் செய்யா விட்டால் நாளைடைவில் நோயாளி இறந்து விடுவார். இதைத் தவிர்க்க ரத்தத்தில் உள்ள இந்த கழிவுகளை சுத்தப்படுத்தும் பணியைத்தான் "டயாலிசிஸ்' என்று அழைக்கிறோம். இந்த இயந்திரம் ஒரு மாற்று சிறுநீரகம் போலவே செயல்படுகிறது,'' என்று விளக்கினார் ஆப்ரகாம்.

மரணத்தை தள்ளிப் போடும் இந்த சுத்திகரிப்பு முறையை தனியார் மருத்துவமனைகளில் செய்தால், மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டி வரும். அன்றாட உணவுக்கே வழியின்றி இருக்கும் ஏழைகளுக்கு சிறுநீரக பாதிப்பு வருமானால் அவர்களுக்கு இறப்பை தவிர வேறு "சாய்ஸ்' இல்லை. இதை போக்க வருமானம் குறைந்த ஏழைகளுக்கு குறைந்தபட்சமாக 400 ரூபாய் செலவில் "டயாலிசிஸ்' செய்யும் புனித காரியத்தை செய்து வருகின்றனர் "டாங்கர்' அமைப்பினர்.

டாக்டர் ஜார்ஜ் ஆப்ரகாம், டாக்டர் சுரேஷ் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் "டாங்கர்' தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் பல்வேறு மருத்துவர்களும் இந்த மையத்தின் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவி செய்து வருகின்றனர்.

""ஆர்ய வைத்யசாலையின் உதவியோடு, கோவையில் அடுத்த 3 மாதத்தில் எங்கள் மையத்தின் கிளையை துவங்கவுள்ளோம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிறுநீரக பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். இவர்களை கவனிப்பதற்காக இவர்களுக்கு என்று சென்னையில் தனியாக ஒரு "டயாலிசிஸ்' மையத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம்'' என்று எதிர்கால திட்டங்களை தெரிவித்தார் ஜார்ஜ் ஆப்ரகாம்.

"டாங்கர்' அமைப்பின் செயலர் லதா குமாரசாமி கூறியதாவது: உலக அளவில் 30 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்களுக்கே பெரும்பாலும் சிறுநீரக பாதிப்பு கண்டறியப்படுகிறது. சிறுநீரக பாதிப்பு 90 சதவீதம் வரை ஏற்பட்ட பின்தான் பெரும்பாலும் பாதிப்பு வெளியே தெரிய வருகிறது. "டயாலிசிஸ்' செய்வதோடு, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உதவி, மருந்துகள் வாங்கி தருதல் என 48 லட்ச ரூபாய் செலவில் உதவிகளை வழங்கியுள்ளோம். இதோடு, ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஊசியும் போட்டு வருகிறோம்.

இத்தனை பணிகளையும் செய்ய காரணமாய் பல்வேறு துறைகளை சார்ந்த பல நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கின்றனர். "டயாலிசிஸ்' செய்வதற்கு ஆகும் செலவை பல்வேறு நன்கொடையாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். முகம் தெரியாதவர்கள் உயிர்வாழ உதவும் அந்த நன்கொடையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறுநீரகம் என்பது...
*நம் உடலின் பின்பகுதியில் உள்ளது.
*நம் உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன.
*10 செ.மீ., நீளமும், 5 செ.மீ.,அகலமும் கொண்டது.
*ஒவ்வொன்றும் 150 கிராம் எடை கொண்டது.
*நச்சுப் பொருள்களை பிரித்தல், ரத்தக் கொதிப்பை சீர் செய்தல், எலும்புகளை உறுதி செய்தல், உடலில் நீர் நிலை சமப்படுத்துதல் உள்ளிட்டவை சிறுநீரகத்தின் பணிகள்.

சிறுநீரக கோளாறின் அறிகுறியும், காரணங்களும் :
"ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உடல்பருமன், புகை பிடித்தல், மது அருந்துதல், அடிக்கடி சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுதல்' போன்றவை சிறுநீரகக் கோளாறின் காரணங்களாகும். முகவீக்கம், சிறுநீர் குறைதல், கால்களில் வீக்கம், சிறுநீரில் ரத்தம் போதல், ரத்த சோகை, பசியின்மை, வாந்தி, உடல் அழர்ச்சி, தூக்கம் இன்மை, அரிப்பு உள்ளிட்டவை சிறுநீரகக் கோளாறின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

creatinine எனும் ரத்தப் பரிசோதனை மூலமும், சிறுநீரக சோதனை மூலமும் இதை கண்டறியலாம். முழுமையாக பாதிப்படைந்து சிறுநீரகம் செயலிழக்கும் முன் கண்டறிந்தால் உரிய சிகிச்சை வழங்க முடியும். இந்த ஆண்டு உலக சிறுநீரக தினத்தின் கோஷம் "உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல்' என்பதாகும்.

-- தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக